Sunday, October 4, 2015

எண்ணங்களை கடத்தல்



கதைகளின் வழியாக சுபகை உலூபியாகின்றாள். அதே கதையின் வழியாக சுஜயன் அர்ஜுனன் ஆகமுடியவில்லை, ஆகியிருந்தால் எப்படி இருக்கும். அது ஒரு வளர்ச்சி, குரோதத்தை தாண்டிச்செல்ல வழி செய்து இருக்கும் ஆனால் தாண்டிச்செல்லமுடியாததால் குரோதத்தில் விழுகின்றான்.  சுஜயன் சுபகையுடன் உள்மனத்தொடர்புக்கொண்டு உள்ளான் ஆனால் தன்னுடன் வெளிமனத்தொடர்பில் இருக்கிறான். அந்த இருமனங்கள் இடையில் உள்ள சுவரை அழிக்கும்வரை அவன் ஒரு குழந்தை மட்டும்.  

கதையின் வழியாக சுபகை உள்மனம் உலூபியாவதை அவன் உள்மனம் எளிதில் அறிகின்றது.  துயிலும்போதும் அவன் உள்மனத்தில் சுபகையுடன் மிக நெருக்கமாக உள்ளான். சுபகையை முழுவதும் உடல் என்று வகுத்து வைத்து உள்ளது அவன் உள்மனம். தன்னையும் உடலாக மட்டுமே தொடர்புப்படுத்தி வைத்து உள்ளான். மனமாக உணர்ந்தாள், சுபகை உலூபியாகும் அந்த கணத்தில் இவன் எடுக்கும் உடல் என்னவாக இருக்கும்? கேள்வித்தேவை இல்லை இங்கு. அது முடியாதபோது அர்ஜுனன் இடம் குரோதம் கொள்ளவே செய்கிறது. அவன் ஏழாம் உலகத்திலேயே நிற்கிறான். சுபகை உலூபியாய் தன்னை உணர்ந்து அதன் இன்பத்தை நுகர்கின்றாள். காமம், பேராசை  என்ற உலகங்களில் அவள் நீந்துகின்றாள். 

கதைகளின் வழியாக மாலனி உள்மனத்தையும் தாண்டிச்செல்கிறாள். குரோதம் இல்லை, காமம் இல்லை, பேராசை இல்லை, அதையும் தாண்டி அர்ஜுனன் எடுக்கும் ஆண் பெண் உடல்புனைவுகளில் கனிந்து, அர்ஜுனன் செய்யும் சித்துக்களில் திளைத்து அர்ஜுனனை அர்ஜுனனாக மட்டும் காண்கிறாள். அவளால் எளிதில் அடுத்தக்கதைக்கு செல்லமுடிகிறது. இந்த இடத்தில் வைத்து சுஜயன், சுபகை, மாலினி மூவரையும் பார்த்தால் அவர்களின் மனம் எந்த எந்த உலகத்தில் இயங்குகின்றது என்பது தெரிகிறது. அவர்களின் மனம் இயங்கும் தன்மைக்கு ஏற்ப அவர்கள் உடல் உள்ளம்படும்பாடு விளங்குகின்றது. தனது நிர்வாணத்தை சுஜயன் பார்த்தான் என்ற தவிப்பு சுபகை இடம். அவள் அர்ஜுனன் உடன் நிர்வாணமாக இருந்தாள் என்ற  கோபம் சுஜயன் இடம். வேடிக்கை மாலினி இடம்.

ஒரு எண்ணத்தில் நாம் நம்மை எப்படி கட்டிவைத்து உள்ளோமோ அதையே வாழ்க்கையின் அந்த கணத்தில் பிரதிபளிக்கின்றோம். ஒவ்வொரு எண்ணத்தையும் கண்டு அது எந்த இடத்தில் உள்ளது என்ற நிலையை தெளிந்து கடந்துச்செல்லும்போது வாழ்க்கை ஒரு கதை மட்டும். எண்ணங்களில் மூழ்குபவன் சுஜயன் ஆகிறான். எண்ணங்களில் நீந்துபவள் சுபகையாகிறாள். எண்ணங்களை காண்பவள் மாலினியாகிறாள்.
ஒரு கதை, ஒரே கணம் ஆனால் மூன்று வாழக்கை.  மனதில் அந்த கதை,அ அதனால் உருவாகும் எண்ணம் துன்பப்படுத்துகிறதா? இன்பம் கொள்ளவைக்கிறதா? தாண்டிச்செல்லவைக்கிறதா? என்பதை மூன்று பாத்திரங்களும் வாழ்ந்துக்காட்டுகின்றன.

மேலே காட்டும் மூன்று எண்ணங்களின் உலகவாழ்க்கையை மனிதர்கள் எளிதில் அடைந்துவிடமுடியும். சிறு சிறு முயற்சியே அதற்குபோதும். ஆனால், அர்ஜுனன் மனம் செல்லும் உயரம் மிகபெரியது “தனிமையில் பிறரை எண்ணி ஏங்காதிருக்கவும் பிறருடன் இருக்கையில் உள்ளத்தில் தனிமை கொள்ளாதிருக்கவும் பயின்றதே அவன் கற்ற கலைகளின் உச்சம் எனப்படுகிறது.”-காண்டீபம்-18. இந்த இடத்தை அடைவது என்பது தவத்தால் அன்றி வேறு எதாலும் அமைவதில்லை. தன்னை கர்மயோகியாக ஆக்கிக்கொள்பவனுக்கே இது சாத்தியம்.

ஏழு உலகம் தாண்டி மனிதன் பயணிப்பது இந்த மனமற்ற நிலையில் நிற்கத்தான். எண்ணங்களை கடப்பவனுக்கு இது வாய்க்கிறது. கர்மயோகி எண்ணத்தை நீந்தி கடக்கிறான். ஞானயோகி எண்ணத்தின் ஊற்றிலேயே காலைவைத்து அமுக்குகிறான். 

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.