Sunday, January 27, 2019

அன்னை



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,



விழிமயக்கா என்று அறியவில்லை 'கார்ப்பெருங்கடல்' என்று கண்டேன்.  கார்கடலின் 15 ஆம் அத்தியாயத்தை வாசித்து முடித்துவிட்டு முதல் அத்தியாயம் முதல் நினைவில் கொண்டு தொகுத்துக்கொள்ள முயன்றேன்.  ஆமை அல்லது நாகம், வேழம், செம்பருந்து.  நாகர், அசுரர், வைதீகஞ்சார்ந்தவர்.  மேற்கே ஆப்கனிஸ்தான் கிழக்கே மியான்மரின் அரக்கன் யோமா மலைத்தொடர், வடக்கு-தெற்காக பாயும் ஐராவதி நதி, ஒரு பரப்பை மனம் கற்பித்துக் கொண்டது.  பருந்து நாகத்தையும் யானையும் உண்டு தன்வயப்படுத்தி விண் எட்டுகிறது, அத்தனை உயரத்தை முன்னிரண்டும் எட்டுவது என்பது பருந்துடன் இணைந்து அதுவென்று ஆகிவிடுவதன் மூலமே சாத்தியம்.  முன்பொருநாள் எகிப்தியவியல் அறிஞரான ஒரு கருப்புமனிதர் பேசுவதை YouTube-இல் கேட்டிருந்தேன்.  பண்டைய எகிப்திய சமயத்தில், பண்பாட்டில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட கிருஸ்தவ மதத்தின் சில அம்சங்களை விளக்கிக் கொண்டு இருந்தார்.  நெல்சன் மண்டேலாவிற்கு பண்டைய ஆப்ரிக்க பண்பாட்டைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை, தெரிந்திருந்தால் இந்தியாவின் மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கை அவருக்கு வியப்பளித்திருக்காது, ஏனெனில் உலகில் அஹிம்சை கொள்கையை முன்னமே கொண்டிருந்தவர் நாம் என்று கூறினார்.  எவ்வாறோ எவையும் தன்வயப்படுத்திக் கொண்டவற்றின் வாயிலாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.



கர்ணனின் பொற்தேர் பற்றி துச்சாதனன் விமர்சிக்கிறான், களத்தில் மறைவு அற்று துலங்கக் கூடியது என்கிறான்.  அது அவன் எதிர்வினை என்றும் அவனது ஆணவத்தை தான் அறிவேன் என்றும் துரியோதனன் கூறுகிறான்.  உண்மையில் இன்று அவன் கதிரோனாகவே எழுகிறான்.  யாவற்றின் மையம் எனத் துலங்குவது அதன் இயல்பு.  மேகங்கள் மறைப்பதும், மண்ணுள்ளோர் கொள்ளும் கருத்துக்களும், விருப்பு-வெறுப்புளும் யாவைக்கும் ஒருசம்பந்தமும் இல்லாமல் நிகழ்வது கதிர்.  இங்கு கர்ணன் அவ்வாறே எழுகிறான் என்று கருதுகிறேன்.  கர்ணனை சூழ்ந்த சிறுமைகளும் அவன் உள்ளத்தில் கொண்ட சிறுமைகளும் ஒன்றுமில்லை என எழுவான், உயர்ந்து தகித்து, கடமை முடித்து மோனமும் ஊழ்கமும் அருளும் ஞானச் செங்கதிர் போல் கார்கடலில் சரிவான் என்று கருதுகிறேன்.



இன்னொன்றும் சொல்லவேண்டும், வாங்கி வைத்து இதுவரை வாசிக்கத் துவங்காமல் இருக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' தற்செயலாக - கையில் எடுத்தேன்.  அதன் கீழ்காணும் வரிகள் –



".....எல்லா ஆசைகளும் அப்பாற்பட்டவன் அவன். ஏனெனில் யாவும் கிடைக்கப் பெற்றுள்ளான். அவன் வேண்டியமட்டும் கரைத்துவிட்டுச் சலிப்படைப்பவன், தானே தனக்கு வேண்டியதைப் படைத்தளிக்கும் கலைஞனாக இருக்கிறான்.  தன் மனத்துள் எழும் புதுப்புது மோகங்களுக்கு ஏற்ப மணிக்கு மணி தனக்கு அவன் புதுப்புது உலகங்களை அல்லவா சிருஷ்டித்துக்கொள்கிறான்! இந்த மாயக்கற்பனை உண்மையில் மாயையென நினைக்க முடியாதபடி அவ்வளவு சுலபமாகவும் இயற்கையாகவும் அதைப் படைத்துக்கொள்ள முடிகிறதே!"



அன்புடன்

விக்ரம்

கோவை