Tuesday, October 7, 2014

அறமாகி வந்தவன்




நீலம் வாசிக்கும்போது சில இடங்கள் ஏன் இத்தனை விரிவாக வந்துகொண்டிருக்கின்றன என்ற எண்ணம் வந்தது.  உதாரணமாக இந்திரனை கிருஷ்ணன் தடுக்கும் அத்தியாயம். இந்திரவிழாவில் வேதவேள்விகள் செய்யப்பட்டன. அதை கிருஷ்ணன் தடுத்தார். கோவர்த்தனகிரி பூசையை ஆரம்பித்தார். சுவிரா ஜெயஸ்வால் அதைத்தான் சொல்கிறார். ஐராவதி கார்வேயும் அதைப்போலத்தான் எழுதியிருக்கிறார் என்பது என் ஞாபகம்

இரண்டு விஷயங்கள்தான் அதிலே முக்கியம். அதாவது  வேதவேள்விகளின் கர்மகாண்டத்தை கிருஷ்ணன் தடுக்கிறார். பயன்கருதி செய்யும் பலிபூசைகள் தேவை இல்லை என்கிறார். ஒவ்வொருவரும் அவரவர் செயல்களின் விளைவுகளைத்தான் அனுபவிக்கிறார்கள். ஆகவே நல்லசெயல் நல்ல விளைவை உருவாக்கும் என்று சொல்கிறார்.தத்துவார்த்தமாகப் பார்த்தால் அவர் சடங்குசம்பந்தமான கர்மக் கொள்கையை மறுதலிக்கிறார். தனிமனிதன் சம்பந்தமான கர்மக்கொள்கையை முன்வைக்கிறார்

அதோடு இன்னொருவிஷயம். அந்தக்காலத்திலே இந்திரன் பெரியதெய்வம். இந்திரனை கிருஷ்ணன் இல்லாமல் செய்கிறார். இந்திர வழிபாடு இல்லாமலாகி கிருஷ்ண வழிபாடு தொடங்குவதையேதான் இந்தக்கதை காட்டுகிறது என்கிறார்கள்.இந்திரன் பல இயல்புகளை கிருஷ்ணன் மேல் வைத்தார்கள் என்கிறார்

ஆனால் இந்திரவிழாவில் பசுவை பலிகொடுப்பது. அதை கிருஷ்ணன் தடுப்பது . அப்போது அவர் பேசும் தத்துவங்கள்.[அந்தக்கதை புத்தர்கதைக்கும் ஏசு கதைக்கும் நெருக்கமானது] என்று அந்த அத்தியாயம் விரிவாக இருக்கிறது. அவ்வளவு விரிந்து செல்வது ஏன் என்ற எண்ணம் வந்தது. கதைக்காகச் செய்கிறீர்கள் என்று நினைத்தேன்

ஆனால் கடைசியில் கம்சனை கிருஷ்ணன் கொல்வதும் [யானையைக்கொல்கிறான். யானை இந்திர வாகனம்] குழந்தைப்பலிகொண்டவர்களைக் கொல்வதும் பார்த்தபோது அந்த அத்தியாயத்தின் இடம் புரிந்தது. அங்கே கருணையின் வடிவமகா இருக்கிறான். ஆநிரைகளை காக்க மலையை தூக்குகிறான். அதே கிருஷ்ணன்தான் இங்கே அத்தனை கொலையாளிகளையும் கழுவிலே ஏற்றுகிறான். அதுவும் இதுவும் ஒன்றுதான். இரண்டுமே தெய்வத்தின் வேலைதான்

கோவர்த்தனகிரி தூக்கும் அந்த அத்தியாயமும் கழுவேற்றும் அத்தியாயமும் கச்சிதமாக ஒன்றை ஒன்று சமனம் செய்கின்றன.  அவற்றை இணைத்துப்புரிந்துகொண்டால்தான் புரியும் என்று தோன்றியது  
மூத்தோரே, அன்னையரே, ஆயர்குலத்தோரே, கேளுங்கள். யுகம் புரண்டு மாறினும் ஏழ்கடல் வற்றி மறையினும் வான் உருகி அழியினும் வேதம் பொருள் விலகினும் மாறாது நின்றிருக்கும் என்சொல்!   

என்று சொல்கிறான் கிருஷ்ணன்.

 விண்ணவன் பலி விழைந்தால் தன் வைரக்கோல் கொண்டு அவனே அதை அடையட்டும். நம் கை வாள் முனையால் நம் அன்னை கழுத்தை நாமே அறுத்திடலாகுமா?” 

என்று கருணையாகபேசுகிறான். ஆனால் அதே கிருஷ்ணன் தான் அங்கே குழந்தைகளின் குருதியிலே தொட்ட எவரும் கழுவேறாமல் இருக்கக்கூடாது என்று சொல்கிறான். அங்கே தன் சொல்லைப்பற்றி கூறவில்லை. அறத்தின் குரலைப்பற்றிச் சொல்கிறான்

வெற்றியும் தோல்வியும் மயங்கும். நூல்களும் சொல் பிழைக்கும். தேவரும் நெறி மறப்பர். ஒருபோதும் அடிதவறுவதில்லை அறம்

என்று சொல்கிறான். அந்த வரிகள் இரண்டையும் இணைத்து வாசித்தபோது நானே அறத்தின் குரல்என்று அவன் சொல்வதுபோலவே இருந்த்து



சாரதி