Saturday, August 25, 2018

பாண்டுவும் குந்தியும்




அன்புள்ள ஜெ ,

பாண்டு தன் திருமணத்திற்காக செல்லும் பகுதியில் கங்கையில் குகர்களின் பாடல் வழியாக தன் அம்மாவின் மனதை அறியும்  நிகழ்விடம்  மிக பிடித்தது , நாவலின் மிக சிறந்த பகுதியில் ஒன்று இது , முதல் முறை படித்த போது என்னால் அந்த பாடலின்   உணர்விற்குள் செல்ல முடியவில்லை , அடுத்தடுத்த வாசிப்பில்தான் உள்புக முடிந்தது ,  கண்கலங்கி விட்டேன் , என் அம்மாவின் ஞாபகமும் சேர்ந்து வந்தது .

நதி சீதையை  , அவள் மனதை உணர்கிறது  , சீதையிடம்  பேசுகிறது , இன்னொரு தளத்தில் கங்கையும்(நதி) சீதையும் ஒன்று என வருகிறது , இன்னொரு தளத்தில் நதி படகுகளை  பாவைகளாக்கி  விளையாடி  கொள்வதை அம்பாலிகாவின்  பாவைகளுடன்  விளையாடி கொள்ளும் மன இயல்புடன் பொருந்துகிறது  .

பாண்டு பாதாள  கங்கையை  கண்டதாக  சொல்கிறான் , அதனோடு பெண்களின் ஆழத்தில் உள்ள துயர் இணைந்து கொள்கிறது , ஜெ எனக்கு பிருதை   வர துவங்கும் காட்சி முதல் பாண்டுவுடனான  முதல் இரவு காட்சிக்கு முன்பு தன் வளர்ப்பு அம்மாவுடன்  பேசும் காட்சி வரை பிருதை மேல் பிரியம் வர வில்லை , ஆனால்  மரீஷையை முதல் காட்சியிலிருந்தே  மிக பிடித்தது , மிக வலுவானவள்  , ஆனால் தன் மனதை வெளிப்படுத்தாமல்  பிறர்க்கு பணி செய்பவளாகவே  தன் வாழ்வை அமைத்து கொள்கிறாள் , காட்டானை  கோவில் யானையாக  ஆவதை போல .
என்னுள் இருக்கும் ஆண் இயல்புதான் பிருதையை விரும்பாமல் ஆக்குகிறதோ  என தோன்றுகிறது :) 

பைரவி அன்னை சிறு நாய்க்குட்டியாக  கர்ணனின் வளர்ப்பு அன்னையின் மார்பில்  தவழும்  இடங்கள் எல்லாம் மகத்தானவை  .

கர்ணனை பிருதை எப்படி தவற விடுவாள்  என்பதை அறியும் ஆவல்  இருந்தது , பாரம்பரிய கதையில் பயந்து அவளாகவே  நதியில் விடுவாள் , ஆனால் இதில் இவள் இயல்பு  பயமறியாதது , ஆதலால்  எப்படி நடக்கும் என எதிர்பார்த்தேன் , அவளாக  விட வில்லை ,இதில்  சூழலால் தவற விடும் படி ஆகிறது 

ராதா கிருஷ்ணன்