Wednesday, May 16, 2018

ஏன் வேதாந்தம்?



ஜெ

வெற்றுவேதாந்தம் என்று பரவலாக ஒரு சொல்லுண்டு. ஏதாவது நாம் பேசினாலே உடனே இதைச் சொல்லிவிடுவார்கள். ஆனால் அவர்களே ஒரு நாலைந்து ஆண்டுகளுக்குள் நம்மிடம் வேதாந்தம் சம்பந்தமாக ஏதாவது கேட்பார்கள். அப்போது எதிலாவது சிக்கி மனம் கலங்கியநிலையிலே இருப்பார்கள். இந்த யதார்தத்தை வாழ்க்கையிலே பார்த்துக்கொண்டிருக்கிறேன்

அதை வெண்முரசிலே கண்டேன்.

எல்லைக்குட்பட்ட அனைத்தும் எல்லையின்மையில் அமைந்துள்ளன. அறிவென அதை கொண்டவர் அதன் எல்லையின்மை கண்டு அஞ்சி எல்லைக்குள் வந்து ஒடுங்கிக்கொள்கிறார். வாழ்வென அதை கொண்டவர் ஒவ்வொரு கணத்திலும் அதன் முடிவிலா திகழ்தலை உணர்ந்து ஆமென்று அமர்ந்திருக்கிறார் .

என்றவரி உதங்கருக்குச் சொல்லப்படுகிறது. அவர் பிரம்மதர்சனத்தை ஞானமாகக் கண்டு திகைப்பு கொண்டவர். அதை வாழ்க்கையாக ஆக்கிக்கொண்டால் விடுதலை உண்டு என்கிறார் கிருஷ்ணன்

சிற்றுண்மை எனக் கொள்பவை அனைத்தும் எத்தனை சிறியோருக்கும் ஏதோ ஒருகணத்திலேனும் பேருருக் காட்டி பதறச்செய்யும் என்று அறிக! முடிவிலி திறந்துகொள்ளாத தருணமேதும் இங்கில்லை. அதில் முட்டி பதைக்காமல் எவரும் வாழ்ந்தமைவதில்லை. முடிவிலி எழுந்த கணமே சிற்றுண்மைகள் பேருண்மைகள் என்றாகிவிடுகின்றன.

என்ற வரி தெளிவாகவே ஏன் வேதாந்தம் என்று சொல்லிவிடுகிறது. எவ்வளவு சாமானியர்களுக்கும் கூட தத்துவதர்ச்னம் தேவையாகிறது. ஒரு சாவை அது இல்லாமல் எதிர்கொள்ள முடியாது. ஆகவேதான் திரும்பத்திரும்ப ஞானிகளிடம் செல்கிறார்கள்.நான் சொல்வதுண்டு தன்னால் சமாலிக்கக்கூடிய கஷ்டம் என்ரால் சோசியர்களிடம் செல்வார்கள். இல்லை என்றால் ஞானிகளிடம்செல்வார்கள் என்று

மந்திரமூர்த்தி