Sunday, December 14, 2014

கள்ளமில்லாமையின் உலகு





ஜெ

இதுவரை வந்த வெண்முரசு பகுதிகளில் இடும்பி வரும்பகுதிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அந்தக்காடு அரக்குமாளிகை எரிந்தபிறகு வருவதனாலேயே ஒரு இனியமனநிலையை உருவாக்கியது. அத்துடன் அன்னையரைப்பற்றிய கதை வந்தபின் இடும்பி அறிமுகமாகிறாள். குரங்குகள், காட்டின் சித்தரிப்பு, பாண்டவர்கள் இயல்பாக ஆகி நகைச்சுவையாகப் பேசிக்கொள்வது என்று மெதுவாக எல்லாமே வேறு மாதிரி ஆகிவிட்டது

ஏன் இந்த அத்தியாயங்கள் இத்தனை அற்புதமாக உள்ளன என்று சிந்தித்தேன். முக்கியமான காரணம் இவற்றில் உள்ள இன்னொசென்ஸ் மிச்ச பகுதிகளில் இல்லை என்பதுதான் என்று தோன்றியது. அரசச் சதிகள். மனோவியல் நுட்பங்கள் எல்லாம் வந்துகொண்டே இருக்கின்றன. தத்துவம் ஊடாடுகிறது. இங்கே எதுவுமே இல்லை. வேடிக்கை விளையாட்டு அடிப்படையான வாழ்க்கை. இதெல்லாம் மட்டும்தான். இது அளிக்கும் சந்தோசமே தனி

இடும்பன் சாகும் அத்தியயாத்துடன் முடித்துக்கொண்டீர்களோ என்ற எண்ணம் எழுந்தது. ஏக்கமாக இருந்தது

சிவராஜ்