Saturday, November 17, 2018

அருவருப்பு




அன்புள்ள ஜெ

போர்க்களத்தில் பீமனிடம் இதுவரை நாம் பாராத சில நடத்தைகளை விசோகன் சொல்கிறான். பீமன் காறித்துப்பிக்கொண்டே இருக்கிறான். களத்தில் மட்டுமல்ல போர் முடிந்தபின்னரும்கூட. முழுப்பொழுதும் துப்பிக்கொண்டே இருக்கிறான். வாயில் ஊறுவதை எல்லாம் துப்ப விரும்புவது போல. இப்படி ஏன் துப்புகிறான்? ஏனென்றால் அவனுக்கு அருவருப்பு இருக்கிறது

பீமனுடையது வஞ்சமே அல்ல என்று விசோகன் சொல்கிறான். அவனிடமிருப்பது அருவருப்புதான். நாம் அருவருப்பவற்றைத்தான் எளிதாக அழிப்போம். குற்றவுணர்ச்சியும் கொள்ளாமலிருப்போம். உகாண்டாவின் டுட்ஸி –ஹூடு கலவரத்தில் எதிரிகளை கரப்பாம்பூச்சிகள் என்று சொல்லிச் சொல்லி அருவருப்பூட்டித்தான் கொன்றுகுவிக்கச்செய்தார்கள் என்று வாசித்திருக்கிறேன். அந்த அருவருப்புதான் இங்கேயும் செயல்படுகிறது

ரா.நடராஜன்