Tuesday, September 30, 2014

வளர்நீலம்




அன்புள்ள ஜெயமோகன்

நீலம் வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விதமான போதைநிலைதான் இருந்தது. அதன்பிறகு கடிதங்களையும் கூடவே வந்துகொண்டிருந்த படங்களையும் பார்த்துப்பார்த்துதான் என்னுடைய எண்ணங்களை நான் வளர்த்துக்கொண்டேன். நிலம் என் வாசிப்பில் ஒரு மாஸ்டர்பீஸ். நீங்கள் எழுதியதிலும்கூட அதுதான் மாஸ்டர்பீஸ் என்று சொல்வேன். சிறந்தநாவல் என்றால் என்னென்ன இருக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறதோ அதெல்லாமே இந்த சின்னநாவலில் இருப்பதை பெரிய ஆச்சரியம் என்றுதான் சொல்வேன்.

மூன்று கதாபாத்திரங்கள்தான். ராதை, கிருஷ்ணன், கம்சன். ஆனால் மூன்றுபேருடைய வாழ்க்கையின் ஒட்டுமொத்தமும் இந்த நாவலுக்குள் இருக்கிறது. நல்ல நாவல்களை வாசிக்கும்போது நான் அடையும் எண்ணம் என்னவென்றால் அது நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நம்மை அறியாமலேயே வளர்ந்துகொண்டு போகும் என்பதுதான் வாசித்துமுடிக்கும்போதுதான் நாவல் வேருஒன்றாக ஆகி நம்மை புதிய இடத்துக்குக்கொண்டுவந்துள்ளது என்பது தெரியும்.

அந்தமாதிரியான நாவலாக மழைபபடலும் வ்ண்ணக்கடலும் இருந்தது. மழைப்பாடலில் சத்யவதியும் குந்தியும் வளர்ச்சி அடைவது பெரிய ஒரு மன எழுச்சியைக் கொடுத்தது. ஆனால் அது நாவல் முடிந்தபோதுதான் நம் கவனத்துக்கே வந்தது. நீலத்திலும் ராதை மாறிக்கொண்டே இருப்பதும் கண்ணன் வளர்ந்துகொண்டே இருப்பதும் நமக்குத்தெரியவேயில்லை. வாசித்துமுடிக்கையில் அந்த வளர்ச்சி நம் மனதை தொட்டு அதிர்ச்சியை அளிக்கிறது.

ராதை முதலில் கண்ணனின் காலைப்பார்க்கிறது ஒரு தொடக்கம். அதன்பின்னர் அவன் அவளை ராதை என்று அழைப்பது. அதன்பின் அவள் அவனுக்கு குழலை எடுத்துக்கொடுப்பது. அதன்பின்  அவன் அவளுடைய நிர்வாணத்தைப்பார்ப்பது. அதன்பின் அவள் அவனுடைய குழலைக்கேட்டு வீட்டைவிட்டுச்செல்வது. இப்படிப் படிப்படியாக அவள் மாறிக்கொண்டே இருக்கிறாள். அந்தமாற்றம் நிகழ்ந்து முடியும்போது நாவல் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது

பொதுவாக அலங்காரம் அணி எல்லாம் உள்ளநடை என்றால் மிகவும் தளர்வாக இருக்கும். சொல்லவேண்டியதை நடைக்காகப்போட்டு நீட்டியிருப்பார்கள். லா.ச.ராமாமிருதத்தின் பிற்காலக்கதைகளிலே இதைத்தான் காணமுடிகிறது. அந்த வளர்த்தலே இந்தநடையிலே இல்லை. ஒரு ஆவேசமான நிகழ்ச்சியைக்கூட -‘கண்ணீருடன் கைநீட்டி அக்ரூரர் அருகே வந்தார். அவன் நீலமேனி தழுவ வந்தவர் நிலம் நோக்கிk குனிந்து தாள்தொட்டு தலையில் வைத்தார்- .என்று சுருக்கமாகத்தான் நீலம் சொல்கிறது. இந்த அடத்திகாரணமாகத்தான் இதை மீண்டும்மீண்டும் வாசிக்கவைக்கிறது. முழுமையான செறிவான ஒருநாவல் என்று சொல்லலாம்

ராஜாராம்
மரபின் மைந்தன் முத்தையா எழுதும் முதற்கனல் விமர்சனத் தொடர்