Tuesday, September 23, 2014

அழிதலின் கணம்




அன்புள்ள ஜெ சார்

நீலம் 333, 34 இரு அத்தியாயங்களையும் படபடப்புடன் படித்தேன்.Hidden erotica நேரடியான காமத்தை விட அதிர்வை அளிக்கிறது. பல இடங்களை படிக்கவே முடியவில்லை. கைநடுங்குவதுபோலிருந்தது. அப்பட்டமான porn விஷயங்களை அப்படியே தாண்டிவிடுகிற இளைஞன் நான். இது வேறுவகை. இதில் eroticism நேரடியாக ஒரு பிரபஞ்ச அனுபவம் மாதிரி விரிந்துவிடுகிறது. அதோடு உடல் நிறைய சொல்லப்பட்டாலும் உடலை வைத்து மனம்தான் சொல்லப்படுகிறது. உடலில் காமம் விறகிலே தீ மாதிரி. மனசுக்குள் காமம் பெட்ரோலில் தீ  மாதிரி என்று நினைத்துக்கொண்டேன்

ராதை கண்ணன் தொட்டதுமே அடைந்த அந்த வெறுப்பு ஏன் என்று நானே யோசித்துக்கொண்டேன். ஏனென்றால் அது என்னோட அனுபவம். நான் அதை ஈகோ என்றுதான் புரிந்துகொண்டேன். ஈகோ என்பது சட்டை மாதிரி. எளிமையாக கழற்றிவிடமுடியாது. பயணங்களில் ஆற்றைக் கண்டால் சட்டையைக் கழற்ற சிலபேர் நிறைய முரண்டுபிடிப்பார்கள். ஆனால் சட்டையைக் கழற்றிவிட்டால் அவர்கள்தான் பயங்கரமாக என்ஜாய் செய்வார்கள்

ராதை காமத்தை கண்டு பயந்தாளா என்று தெரியவில்லை. ஆனால் என்ன ஆகும் என அவளுக்குத்தெரியும் என்று தோன்றியது. அவள் தொட்டதும் கோபம் கொள்ளவில்லை. கைகள் பயணம்செய்ய அனுமதிக்கிறாள். அது ஒரு எல்லைக்குச் சென்றபின்னர்தான் சீறுகிறாள்

The peak of classical erotica என்றுதான் சொல்வேன். காமத்தை எழுத இனி என்ன இருக்கிறது என்றுதான் நினைத்தேன்

பார்த்திபன் கண்ணன்



அன்புள்ள பார்த்திபன்

நன்றி

யோகமரபில் அந்தப்புள்ளிக்கு மேலும் பல அர்த்தங்கள் உண்டு.  இறையனுபவத்துக்காக ஏங்கித்தவிக்கும் ஆன்மா அதை எய்தும் கணத்தில் அஞ்சி விடுகிறது. அகங்காரம் எழுந்துவிடுகிறது. அதை ராமகிருஷ்ணர் சொல்கிறார்- உப்புப்பொம்மை கடலை அடையும் அனுபவம் அது. அது அழியாமல் கடலை அறிய முடியாது. அந்த தன்னிலை அழிவு மகத்தான ஒரு தியாகம் . யோகிகளிலேயே 90 சதவீதம் பேர் அந்தப்புள்ளியில் அகங்காரம் எழுந்து நின்றுவிடுவார்கள் என்றார் நித்யா

அந்தப்புள்ளியில் இறைவனே வந்து ஆன்மாவை தன் தலையில் ஏந்துகிறார். மார்பில் ஏந்துகிறார். அது பிற மதங்களில் இல்லை. வைணவத்தில், குறிப்பாக ராஸயோக மார்க்கத்தில்- மட்டுமே உள்ள ஒரு தரிசனம்

ஜெ