Thursday, September 25, 2014

விண்வடிவம்


ஜெமோ

இன்றைய நீலம் அதன் இன்னொரு பக்கத்துக்குத் திரும்பி உச்சம் அடைகிறது. ராதை ஒரு விஸ்வரூபத்தை காண்கிறாள். கல் உடைக்கும் கழனியுழும் கண்ணனைப் பார்த்தபோது. இங்கே வசுதேவரும் மதுராபுரியின் மக்களும் வேறு ஒரு விஸ்வரூபத்தைப் பார்க்கிறார்கள்.

அறமெனும் இறைவன். அழிவற்றவன்.
ஆயிரம் கோடி சொற்களாலும் மறைத்து விடமுடியாதவன்.
தெய்வங்களும் விழிநோக்கி வாதிட அஞ்சுபவன்.
நாநிலம் அறிக! நான்கு வேதங்கள் அறிக!
நன்றும் தீதும் முயங்கும்.
வெற்றியும்தோல்வியும் மயங்கும்
 நூல்களும்சொல் பிழைக்கும். தேவரும் நெறி மறப்பர்.
ஒருபோதும் அடிதவறுவதில்லை அறம்

என்ற வரிகள் வழியாக அவன் இந்த பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் ஒரு அறப்பேருருவை [மகாதர்மகாயம் என்று புத்தமரபிலே சொல்வார்கள்] காட்டிவிடுகிறான். தர்மநியாயங்கள் எல்லாம் சரிதான், ஆனால் மானுடன் மீறவே முடியாத அறத்தின் சில இடங்கள் உண்டு என்று அவன் சொல்லும் இடம் தான் உண்மையான விஸ்வரூபம்

“கொல்லாதது அறமல்ல. பழி வெல்லாதது தெய்வமும் அல்ல.”

இந்த விஸ்வரூபத் தோற்றம் ஏன் கம்சனுக்குக் கிடைக்கவில்லை. நியாயப்படி அவனுக்குத்தானே கிடைத்திருக்கவேண்டும்? அவனுக்குக் கிடைத்தது மிகச்சிறிய தோற்றம். அவன் மடியிலே சின்னக்குட்டி

நான் நினைக்கிறேன். அவன் வளர்ந்துவிட்டான். ராதையின் மறுபக்கம் அவன். அவனே அதைச் சொல்கிறான். ராதையும் சிறியவடிவத்திலேதான் பார்த்தாள். அவளால் கையாளக்கூடிய வடிவத்திலே. அவர்கள் இருவருமே வளர்ந்துவிட்டவர்கள். விஸ்வரூபம் அவர்களுக்கே தெரியும்.

சும்மா யோசிப்பதுதான். ஆனாலும் இப்படியெல்லாம் பல வழிகளில் சிந்தனைகலும் உணர்ச்சிகளும் பீரிட்டுச் செல்வது ஒரு நல்ல அனுபவம். நன்றி


சாமிநாதன்