Tuesday, September 30, 2014

சொல்லின்மை



அன்புள்ள எழுத்தாளருக்கு...

பொறாமை, பொறாமையாக வருகின்றது. கண்ணனின் மதுரத்தில் திளைத்து எழுந்தமை கண்டு.

நன்றிகள்.
இரா.வசந்தகுமார்.

அன்புள்ள வசந்தகுமார்

நன்றி

மெல்ல மீண்டுவிட்டேன். அந்நாட்களின் பரவசமும் பரிதவிப்பும் இப்போது அந்த குறிப்புகளாகத்தான் எனக்கும் மிச்சமிருக்கிறது

ஜெ




அன்புள்ள ஜெ சார்

நீலம் வாசித்தபோது உண்மையில் எனக்கு அவ்வப்போது ஒரு பரவச அனுபவமாகக் கிடைத்த சிலவரிகளும்  வார்த்தைகளும் மட்டும்தான் அனுபவமாக இருந்தன. அது ஒட்டுமொத்தமாகப்புரியவில்லை. கிருஷ்ணனை ராதை சின்னக்குழந்தையாகப்பார்க்கிறாள் என்பது புரிந்தது. அதன்பின் அவளுடைய பித்து புரிந்தது.

ஆனால் வாசித்துமுடித்தபிறகு ஒரு சிலிர்ப்பு. அவன் ராதைக்காக புல்லாங்குழல் வாசிக்கிறான். அதற்க்காகவே தேடி வருகிறான். ஆனால் சின்னக்குழந்தையாக இருக்கும்போதே அவளுக்காக அவன் கதறி அழுவதை ஞாபகம் படுத்திக்கொண்டேன். அன்று முதல் அந்த கடைசிநாள் வரை தீராத ஏக்கமாக அது இருந்தது. அதுதான் ராதை என்று நினைத்துக்கொண்டேன்

மீண்டும் வாசிக்கவேண்டும்

சுபா



அன்புள்ள ஜெ

நீலம் வாசித்தபோது நிறையப் பேசணும்போல இருந்தது .அதுதான் போனிலே கூப்பிட்டேன். ஆனால்  பேசியபோது ஒன்றுமே பேசமுடியவில்லை. காரணம் என்னால் என்னபேசுவது என்று சொல்லமுடியவில்லை. ஒருவிதமான உணர்ச்சிவசப்பட்டநிலை மட்டும்தான்

இப்போது வாசித்துமுடித்ததும் அதே மனநிலைதான். கடிதங்களைத்தான் திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டே இருக்கிறேன். கடிதங்கள் எனக்கு நான் நினைப்பதைச் சொல்வதுமாதிரி இருக்கின்றன. அந்தக்கடிதங்களை வைத்துத்தான் கடிதங்களை எழுதவேண்டும் என்று நினைத்தேன்

கொஞ்சநாள்கழிந்து எழுதுகிறேன்

எம்




அன்புள்ள ஜெ சார்

நீலம் என்னுடைய உணர்ச்சிகளுக்கு ஒருவடிகால் மாதிரி இருந்தது. நீலம் வாசிக்கும்போது எனக்கு நான் சின்னப்பெண்ணாக இருக்கும்போது வந்த சிலபாட்டுகளைத்தான் நினைவுபடுத்தியது. ரோஜாவிலே உள்ள புதுவெள்ளைமழை பாட்டு எனக்கு ஒருபெரிய கனவுமாதிரி. எப்போதுகேட்டாலும் அழுதுவிடுவேன். வாழ்க்கையே இல்லாமல் போய்விட்டது என்றுகூடத் தோன்றும். நீலம் பலஇடங்களில் அப்படி அழுகையை உணர்ந்தேன்

என்ன இது இவ்வளவு பெரியநாவலை சினிமாவுடன் ஒப்பிடுகிறேனே என்று தோன்றும். நீங்களும் அதேபோல உங்கள் சின்னவயசு பாடல்களை நினைக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளித்தது

செல்வி.