Friday, January 16, 2015

பேசாதவர்கள்



இதுவரையிலும் தருமன் வினைகர்த்தாவாக வரும் நிகழ்வுகள் மிகக் குறைவு. ஆகவே அவன் பேசுவதும் குறைவு. அவனிடம் பேசுபவர்கள் அதனிலும் குறைவு. ஆக அவனைப் பற்றி வரும் தருணங்கள் குறைவு.
இரண்டாவது, தருமன் ஒரு வித அகத் தேடலில் இருப்பவன். அவன் தேடுவதோ நிலையான அறம். அத்தேடலை அவனின் பரிணாமமாகக் காட்டுவது தான் அவனை நம்மிடம் அணுக்கமாக்கும். ஆகவே தான் அவன் அக நிகழ்வுகள் குறைவாகவே வருகின்றன.
அர்ஜுனனின் கதை சற்று வேறு. பாண்டவர்களிலேயே அனைத்தும் பெற்றவன் என்று அனைவராலும் நினைக்கப் படுபவன் அவன். ஆனால் அவன் அவனைப் பற்றிக் கொண்டிருக்கும் நினைப்பு வேறு. அவனும் இளமையிலிருந்து எப்போதும் யாராவது ஒருவரைத் தேடிக் கொண்டேயிருக்கிறான். முதலில் குந்தி, பின்பு துரோணர், அதன் பிறகு தருமன், கடைசியில் கிருஷ்ணன். அவன் தன்னையுணர்ந்து நிறைவடைவது தான் அவன் வளர்ச்சி. ஆகவே அவனின் அகக் குழப்பங்கள் மிக விரிவாக வருகின்றன.
அடுத்த புத்தகங்களில் தருமன் மேலும் மேலும் நம்மிடம் இன்னும் நெருங்கி வருவான் என்று நினைக்கிறேன். 

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்