Sunday, January 4, 2015

பாலையின் நிறம்



அன்புள்ள ஜெ சார்,

வெண்முரசின் நிலக்காட்சிகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை வந்த நிலக்காட்சிகளில் மிகவும் மனதிலே நின்றது பாலைவனத்தின் காட்சிதான். வேறு எதை வாசித்தாலும் திரும்பிச்சென்று பாலைவனத்தையும் வாசித்துவிடுகிறேன். நீங்கள் சென்ற எல்லா பாலைவனத்தின் சித்தரிப்பும் அதிலே உள்ளது.

பாலைவனம் வேறு எதுவுமே இல்லாமல் உள்ளது. மரமோ செடியோ ஒன்றும் இல்லை. அதிலே ஒன்றும் இல்லை என்பதைத்தவிர எதையுமே நம்மால் கவனிக்க முடியாது. அதுதான் அதற்கு அவ்வளவு முக்கியத்துவத்தை அளிக்கிறது என்று நினைக்கிறேன்.

அதன் நிறம் கூட காரணமாக இருக்கலாம். பச்சை மாதிரி இல்லாமல் அது சிவப்பாக இருக்கிறது. சதை மாதிரி. அல்லது உரித்த தோல் மாதிரி. அதை பல இடங்களில் நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்

அதோடு அதில் முளைக்காத விதைகள் இருக்கின்றன என நாம் அறிவதும் ஒரு காரணம். பாலைவனத்திற்கும் பசுமைக்கும் இடையே நடக்கும் சண்டை என்றே வென்முரசை சொல்லலாம்.

பாலைவன நகரங்களை மீண்டும் நீங்கள் எழுதவேண்டும் ஜெ

முத்துக்கிருஷ்ணன்