Wednesday, September 5, 2018

வாசிப்புகள்



அன்புள்ள ஜெ

வெண்முரசு நாவலுக்கு இடைவெளி விடப்படும் காலகட்டம் என்பது பொதுவாக வாசகர்களுக்குத் துன்பம் அளிப்பது. அப்போது வாசகர்களாகிய நாங்கள் மீண்டும் பழைய வெண்முரசு நாவல்களை வாசிப்பதும் தொகுத்துக்கொள்வதும் வழக்கம். இந்த முறை அந்த இடைவெளியில் கிட்டத்தட்ட பத்து கட்டுரைகள் வாசிக்கக்கிடைத்தன. அதில் அருணாச்சலம் அவர்களின் கட்டுரை மட்டும் ஒரு சின்ன புத்தகம். பிரிண்ட் அவுட் எடுத்ததில் முப்பத்தைந்து பக்கம் வந்தது. அவற்றை படித்து முடித்தபோது ஞாபகத்திலேயே வெண்முரசின் பதினேழு நாவல்களையும் வாசித்துமுடித்த நிறைவு உருவாகியது. இந்நாவல்களை இப்படி ஒட்டுமொத்தமாகப்பார்க்கும் வாய்ப்பு என்பது மிக அரிதான ஒன்று. விமர்சகர்களுக்கு மனமார்ந்த நன்றி

ஜெயராமன்