Saturday, September 22, 2018

கண்ணும் அம்பும்




ஜெ

போர்க்கள விவரணையின் ஒரு நுட்பத்தை இன்னொரு முறை வாசித்தபோதுதான் உணர்ந்தேன். சுஜயன் சாகிற இடம் இப்படிச் சொல்லப்படுகிறது


அவன் மேல் அம்பு தைத்த சந்தர்ப்பத்தை அவன் அறியவே இல்லை. அவன் போர்வெறிகொண்டிருக்கிறான். அர்ஜுனனைப் பார்த்துக்கொண்டே போர் செய்கிறான் உக்கிரமான போர் முடிந்தபிறகுதான் அவன் தன் உடம்பை உணர்கிறான். அம்பு தைத்திருப்பதை காண்கிறான். மூச்சு தடுக்கிக்கொள்கிறது. தசைகள் இழுபடுகின்றன. அந்த அம்பிலே அர்ஜுனனின் முத்திரை இருபதைக் காண்கிறான்

ஆனால் எப்போது அந்த அம்பு தைத்தது? அது சொல்லப்படுகிரதா? அதை அறிய மீண்டும் வாசித்தேன். இந்த வரி கண்ணுக்குப்பட்டது.

அர்ஜுனனின் நோக்கு ஒருகணம் வந்து சுஜயனை தொட்டுச்சென்றது. மெய்ப்புகொண்டு உடல் உலுக்கிக்கொள்ள பற்களை கிட்டித்து மூச்சை இழுத்து மேலும் மேலுமென அம்பு தொடுத்தபடி சுஜயன் பீஷ்மரின் அருகே சென்றான்

இந்த இடத்தில்தான் அம்பு பட்டிருக்கிறது. அந்த ஒரு கண நோக்கு ஓர் அம்பு. கண் சென்ற இடத்தில் அம்புசென்று தைப்பது அர்ஜுனனின் வழி. அப்போது சுஜயன் அம்பைப்பார்க்கவில்லை. அர்ஜுனனின் கடைக்கண் பார்வை கிடைத்ததே என்றுதான் நினைக்கிறான். அந்த மலர்ச்சியையே அடைகிறான். அவன் கடைசியாக அந்த அம்பைப் பார்த்து அது அர்ஜுனனின் அம்புதான் என்று உணரும்போதும் அந்த நிறைவுதான் ஏற்படுகிறது

சாரங்கன்